1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

பொருள் : அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.


2.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்:மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்: எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌ (கேட்டவாறே கொள்ளாமல்‌) அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்: தான்‌ சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.

5.உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும்‌ பின்னே வருந்திக்‌ குவிதலும்‌ இல்லாதது அறிவு.

6.எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்: உலகம்‌ எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில்‌ தானும்‌ அவ்வாறு நடப்பதே அறிவாகும்‌.

7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்: அறிவுடையவர்‌ எதிர்காலத்தில்‌ நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்‌; அறிவில்லாதவர்‌ அதனை அறிய முடியாதவர்‌.

8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்: அஞ்சத்தக்கதைக்‌கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்‌; அஞ்சத்தக்கதைக்‌ கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின்‌ தொழிலாகும்‌.

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்‌ கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர்‌ நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம்‌ ஒன்றும்‌ இல்லை.

10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்: அறிவுடையவர்‌ (வேறொன்றும்‌ இல்லாதிருப்பினும்‌) எல்லாம்‌ உடையவரே ஆவர்‌; அறிவில்லாதவர்‌ வேறு என்ன உடையவராக இருப்பினும்‌ ஒன்றும்‌ இல்லாதவரே ஆவர்‌.